Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப் பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 24-ந்தேதி வரை நடைமுறையில் இருந்து வருகிறது.
அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முழு ஊரடங்கை முழுமையாக
கடைப்பிடிப்பீர் என்று ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கொரோனா நோய்த்தொற்றும், அதை தடுக்க ஊரடங்கும் நடைமுறையில் இருக்கின்ற இந்தத்
தருணத்தில், அனைத்து சமயங்களைச் சார்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களையும் தவிர்த்து, தொற்றைக் குறைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு முழு
ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.
சிறுபான்மையின மக்கள் மீது தி.மு.க.விற்கு மதிப்பும் மரியாதையையும் நன்கு அறிந்த இஸ்லாமியர்கள் அனைவரும் இந்த ரமலான் பண்டிகையை தங்களது
இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு கொண்டாடி
மகிழ்ந்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.